விளாத்திகுளம் அருகே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், கடந்த 1-1/2(ஒன்றரை) மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகப்படாத நிலையில் இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று மதியம் கமலாபுரம் கிராம மக்கள் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வாகனங்களுக்கு வழி விட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக தங்களுக்கு வர வேண்டிய குடி தண்ணீரும் வரவில்லை, சீவலப்பேரி நீர்த்தகத் தொட்டியும்  (வாட்டர் டேங்க்) உடைந்த  நிலையில் இருப்பதால் முறையான குடிநீர் கிடைக்கவில்லை  என்பதால், ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய் க்கு  விலைக்கு வாங்கி வருவதாகவும், குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்ததோடு மட்டுமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.