தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள நற்கலைக்கோட்டைச் சேர்ந்த ஆண்டி நாயக்கர் என்பவரது மனைவி கணபதியம்மாள்(85). இவர் கடந்த 28-ம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது இறுதி சடங்கிற்கு அவரது பேரனுடன் தூத்துக்குடியில் இருந்து சிலர் நற்கலைக்கோட்டைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு முன்பு பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் மக்களுக்கு தொந்தரவு செய்துள்ளனர். இதனை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து பட்டாசு வெடிக்கவே, சிறிது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் சென்றுவிட்டனர். இந்நிலையில், பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் சிலர் கூலிப்படையினருடன் இன்று மாலை நற்கலைக்கோட்டைக்கு வந்து அங்கிருந்த பெட்டிக்கடையில் இருந்த விவசாயி கந்தசாமியை(59) வாள் கொண்டு தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது மருமகள் சத்ய பவானி(29), மற்றும் ஜெயச்சந்திரன் மனைவி குமார் கண்ணம்மா(40) ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டுக்காயமடைந்த கந்தசாமி உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சைக்காக எட்டயபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, கந்தசாமி மட்டும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.