தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிக கனமழையும்,  கனமழையும் பெய்து வரும் நிலையில், விளாத்திகுளம் பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழை பெய்துவந்த நிலையில் பிற்பகல் முதல் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் விளாத்திகுளத்தின் பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் முறையாக பராமரிக்காததால் சாலையிலேயே மழை நீர்- கழிவு நீருடன் தேங்கி காணப்படுகிறது.  ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்காமல் செல்வதற்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தும் விளாத்திகுளம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின்  மெத்தனப்போக்கு காரணமாக விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பல வார்டுகளிலும், சுற்றி உள்ள பல கிராமங்களிலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மழை நீர் அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு மழை நீர் தேங்கி நிற்காதவாறு கால்வாய்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதுமட்டுமன்றி, விளாத்திகுளத்தில் சில பகுதிகளில் மழையினால் மின் ஒயர்கள் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது .  ஆட்சிக்கு யார் வந்தாலும் எங்களின் நிலைமை மாறவில்லை என்றும்,தங்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு விடை கிடைக்குமா  என விளாத்திகுளம் 15 வது வார்டு பொதுமக்கள் தங்களின் வருத்தங்களை தெரிவித்தனர்.