"காந்தி ஜெயந்தி விழாவை" முன்னிட்டு விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயக பாதுகாப்பை வலியுறுத்தியும், பிரிவினைவாதத்தை எதிர்த்தும் விளாத்திகுளத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த அமைதி ஊர்வலத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகரத் தலைவர் ஞானராஜ், வட்டார தலைவர் ராக்கன், வார்டு கவுன்சிலர் செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், தத்தனேரி பஞ். தலைவர் சுரேஷ், ஊடகப் பிரிவு ராஜசேகரன், வட்டார தலைவர்கள் முத்துகிருஷ்ணன்,தொம்மைகுரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலமானது விளாத்திகுளம் ஆற்று பாலம் அருகே தொடங்கி விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு முடிவுற்றது. இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் வேலுச்சாமி, அப்பணசாமி, திருமணி, காமராஜ், தியாகராஜன், மாரிமுத்து, ஆரோக்கியசாமி, முகமது பைசல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.