விளாத்திகுளம் பகுதியில் 200-க்கும்‌ மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா : சீர்வரிசை பொருட்களை வழங்கி எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகிழ்ச்சி!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு  சேலை, தேங்காய், மஞ்சள் கயிறு, பூ, வளையல், குங்குமம் அடங்கிய வளைகாப்பு சீர் தொகுப்பினை வழங்கினார். இதனைத்தொடர்ந்து கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் பூட்டி வளைகாப்பு விழா நடைபெற்றது. மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் கர்ப்பிணி பெண்களை வாழ்த்தி தாலாட்டு பாடி அசத்தினர். விழாவின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது "இது பெண்கள் விழா, அதுவும் கர்ப்பிணிகளை போற்றும் விழா என்பதால் கர்ப்பிணி பெண்கள் தான் குத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறி எம்.எல்.ஏ... கர்ப்பிணி பெண்களை மேடைக்கு வரவழைத்து குத்துவிளக்கு ஏற்ற வைத்த நிகழ்வு... விழாவில் கலந்து கொண்ட அனைவரிடமும் நெகிழ்ச்சியைஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு வகைவகையான சாதங்கள் கொண்டு அறுசுவை விருந்து மதிய உணவாக வழங்கப்பட்டது. இதேபோன்று புதூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 105 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.