விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பெருந்திருவிழாக் கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பெருந்திருவிழாவானது இன்று வெகு விமர்சையாக திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து கொடி வஸ்திரம் மற்றும் கொடி பட்டு நகர் முழுவதும் உலாவாக கொண்டு செல்லப்பட்டு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தியம் பெருமான் மற்றும் கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், இத்திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் 9-ம் திருநாளை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண வைபவமும், 10-ம் திருநாளை முன்னிட்டு நடைபெறும் திருத்தேரோட்டமும் விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது....