தமிழக முழுவதும் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஒரே இடத்தில் முகாமிட்டு அந்த பகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவிட்டு தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் இம்முகாமில் பொது மக்களின் வசதிக்காக மனுக்கள் எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அதிகாரிகளிடம் அளித்து தீர்வு கண்டுள்ளனர்.