விளாத்திகுளம் வைப்பாற்றில் "மாட்டு வண்டி மணல் குவாரி" - தமிழக அரசுக்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றங்கரை, வைப்பார், விளாத்திகுளம், சிங்கிலிபட்டி, சித்தவநாயக்கன்பட்டி, வேடபட்டி, பனையடிப்பட்டி, குளத்தூர், நாகலாபுரம், மீனாட்சிபுரம், துலுக்கன்குளம் உள்ளிட்ட ஏராளமான பகுதியில் சுமார் 600க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தற்போது மாட்டு வண்டிகள் மூலம் ஆற்றுமணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மிகவும் வாழ்வாதாரம் இழந்து மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்கு கூட வழியின்றி தவித்து வருவதாகவும், அதிலும் பல மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது மாடுகளை இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வதாகவும்... இதனால் நாட்டு மாடு இனமே அழிந்துவிடும் அபாயமான நிலை உண்டாக்கியுள்ளது என்று வேதனையுடன் கூறுகின்றனர். ஆகையால், தமிழ்நாடு அரசு விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் மாட்டுவண்டிகள் மூலம் மட்டும் மணல் அள்ளுவதற்கு உடனடியாக மணல் குவாரி அமைத்து டோக்கன் முறையில் மணல் அள்ளி நியாமான விலையில் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்...
மேலும், இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கும், ஏழை எளிய மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் தேவைப்படும் மணலை விளாத்திகுளம் வைப்பாற்றில் இருந்து நீர் வளத்தை பாதிக்காதவாறு கனரக வாகனங்களை பயன்படுத்தாமல் முன்பு இருந்த டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தி பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் மாட்டு வண்டிகள் மூலம் மட்டும் ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, அரசு அனுமதியுடன் வைப்பாற்றில் மணல் குவாரி அமைத்து அதிகாரிகள் மேற்பார்வையில் மாட்டுவண்டிகள் மூலம் ஆற்று மணல் அள்ளி கட்டுமான பணிக்கு மணல் தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்வது நடைமுறைக்கு வந்தால் விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த 600க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என்பது மிக முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.