தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சக்திவேல் (38). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் சக்திவேல் சிறுசிறு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்த சக்திவேல் கடந்த திங்கட்கிழமை முதல் 2 நாட்களாக வீட்டிற்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சக்திவேலின் குடும்பத்தினர் காணாமல் போன அவரை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில், நாகலாபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல்(66) என்ற முதியவரின் வீட்டில் ஆடைகளின்றி, துர்நாற்றத்துடன் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் சக்திவேல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சங்கரலிங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதி மக்களிடம் இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சக்திவேல், நாகலாபுரத்திலுள்ள சண்முகவேல் என்ற முதியவரின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.