வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்கா, கோவில்கள், மசூதிகள், தேவாலயம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில் தமிழக மற்றும் மத்திய காவல் துறையினர் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி,திருச்செந்தூர்,ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம்,கோவில்பட்டி,சாத்தான்குளம் உள்ளிட்டமாவட்டம் முழுவதும் வெடிகுண்டு கண்டுபிடித்து வெடிகுண்டை செயல் இழக்க   செய்யும் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் அதேபோல் எட்டையாபுரம் பேருந்து நிலையம், எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம், சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் மோப்பநாய் மற்றும் சோதனை செய்யும் கருவிகளுடன் சோதனை மேற்கொண்டனர்.