விளாத்திகுளத்தில், "அரோகரா" கோஷம் விண்ணை பிளக்க சூரசம்ஹாரம் செய்த சண்முகர் சுவாமி :  திரளான பொதுமக்கள் கண்குளிர கண்டு மலர்கள் தூவி தரிசனம்!



கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கடந்த சில நாட்களாக சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்த நிலையில், இன்று சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


இதேபோல தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், கடந்த 22-ம் தேதி முதல் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கப்பட்டு ஒவ்வொரு நாட்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன, இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்றுஸ்ரீ சண்முகர், நரசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதையொட்டி இன்று அதிகாலையே கோவிலில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர், மாலை 4 மணி அளவில் தொடங்கிய சூரசம்கார நிகழ்வில் முதலாவதாக, விளாத்திகுளம் கற்பக விநாயகர் கோவில் முன்பு ஜெயந்திநாதர் அசுரனை வதம் செய்யும் தாரகாசுரவதம், இரண்டாவதாக கரையடி காளியம்மன் திருக்கோவில் அருகில் சிம்மாசுரவதமும், பின் இறுதியாக மாலை 6 மணியளவில் சன்னதி தெருமுனையில், ஆறுமுகங்களுடன் பக்தர்களுக்கு விஸ்வரூப காட்சி அளித்த ஸ்ரீ சண்முகர் சூரபத்திரனை வதம் செய்யும் சூரபத்திரவதம் நிகழ்ச்சி தத்துரூபமாக நடைபெற்றது. 



இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்று கோஷமிட்டு சண்முகர், அசுரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை கண்டு களித்தனர். பின்னர், பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவற்றை படைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.