தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 மற்றும் அதிகளவில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு ரூ.6000 என நிவாரணத்தொகையாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று முதல் இந்த 4 மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலமாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதேபோன்று விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நியாய விலைக் கடையில் வைத்து நிவாரணத் தொகையை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி நிவாரணத்தொகை வழங்கும் பணிகளைத் தொடக்கி வைத்தார். அதேபோன்று, மழையால் வீடுகளை முற்றிலுமாக இழந்த 22 பேரில் முதற்கட்டமாக 20 குடும்பத்தினருக்கு விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியதோடு வீடுகள் கட்டுவதற்கு உதவி செய்வதாக தெரிவித்தார்.  மேலும், தொடர் கனமழையால் சேதமடைந்த 245 வீடுகளுக்கும், உயிரிழந்த 367 ஆடுகள், 10 மாடுகள் மற்றும் 2020 கோழிகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் மிக விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.