தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாசி மக உற்சவ விழா இன்று வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து கொடி வஸ்திரம் மற்றும் கொடி பட்டு கிராமம் முழுவதும் உலாவாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  மேலும், இக்கோவிலின் மாசி மக உற்சவ விழாவின் 9-ம் நாள் திருவிழாவையொட்டி நடைபெறும் திருத்தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.