விளாத்திகுளம் அருகே 23 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது பள்ளிக்கு கல்விச் சீர் கொண்டு வந்த அரசு உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் ; மீண்டும் வகுப்பறையில் அமர்ந்து "பிரம்பால் அடி வாங்கி" பள்ளி மாணவர்களாகவே மாறி மனம் மகிழ்ந்த தருணங்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மு.கோட்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2002-2003 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் இன்று 23 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து கல்வி சீர் கொண்டு வந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி மகிழ்வுற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி காலத்தின் போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, பாடல்கள் பாடி, தங்களது முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் போது தங்கள் பயின்ற வகுப்பறையில் மீண்டும் மாணவர்களாகவே அமர்ந்து அப்போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை மீண்டும் பாடம் எடுக்க வைத்து, ஆசிரியர்களிடம் "பிரம்பால் அடி வாங்கி" தங்களது பள்ளி பருவத்திற்கே மீண்டும் சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது... இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற பணத்தினை பள்ளியின் அடிப்படை வளர்ச்சிக்காக தன்னார்வத்துடன் வழங்கியுள்ளனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுடன் ஒன்றாக கூடி அமர்ந்து விருந்து பரிமாறி உணவருந்தி மனமகிழ்வுடன் விழாவை சிறப்பித்தனர்.