விளாத்திகுளத்தில், விமர்சையாக நடைபெற்ற " ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ வழிபாடு" : நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற " ஐப்பசி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தை" முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தாமரைப்பூ, அருகம்புல், எருக்கம் பூ, செவ்வரளி, மஞ்சள், வில்வஇலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன..