வெம்பூரில் சிப்காட் அமைக்க அதிமுக எதிர்ப்பு : விளாத்திகுளம் முன்னாள் MLA சின்னப்பன் ஆவேசப் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க மும்முரமாக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கிராம சபை கூட்டத்தில் இங்கு சிப்காட் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடாமல் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுகவினர் இன்று வெம்பூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள விவசாயிகளிடம் இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விளாத்திகுளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன்;
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்தில் 2,700 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணியை இந்த அரசாங்கம் ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூரில் 1700 ஏக்கரும், விளாத்திகுளம் வட்டத்திற்கு உட்பட்ட பட்டித்தேவன்பட்டியில் 650 ஏக்கரும், கீழக்கரந்தையில் 200 ஏக்கரும், மேலக்கரந்தையில் 150 ஏக்கரும் என முழுக்கமுழுக்க விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணியை மிக வேகமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமங்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் என சுமார் 7000 கால்நடைகளுக்கு மேல் உள்ளன. இங்கு சிப்காட் அமைத்தால் இந்த கால்நடைகளும், இங்குள்ள விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக வெம்பூர் கிராமத்திற்கென தேசிய அளவில் பெயர் பெற்ற பொட்டு ஆடு என்ற இனத்திற்கே மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே வைப்பார் கிராமத்தில் சிப்காட் அமைக்க மேற்கொண்டார்கள். அங்கு அரசாங்கத்தின் புறம்போக்கு இடம் 989 என்ற ஒரே சர்வே நம்பரில் 1229 ஏக்கர் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் அமைக்கும் பணியை யாரும் தடுக்கவில்லை... அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்காமல், முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கும் இப்பகுதியில் வேகமாக சிப்காட் அமைக்கும் பணியை மேற்கொள்வது ஏன்? என்று வியப்பாக உள்ளது. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் வைப்பாரில் சிப்காட் அமைக்கின்ற பணிக்கு, இன்றைக்கு தனியார் உப்பள தொழிலதிபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். வெம்பூரில் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் பணியை முழுமையாக ரத்து செய்து கைவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதனை கைவிடாத பட்சத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்....