விளாத்திகுளம் அருகே 40 ஆண்டுகளாக வேம்பாரில், பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் தேவாலயத்தினரிடையே நிலவிய பிரச்சனைக்கு தீர்வு !தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில், பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள புனித தாமஸ் தேவாலய நிர்வாகிகளிடையே 40 ஆண்டுகளாக நில உரிமை பிரச்சனை இருந்து வந்த நிலையில், கோவில் தரப்பினர் பத்திரகாளியம்மன் கோவிலை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. இதில் கோவில் மற்றும் தேவாலயத்தினரிடையே மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக  இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். இதுதொடர்பான வழக்கில் கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சுற்றுச்சுவர் கட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்கு மாவட்டக் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிடப்பட்டதைத்தொடர்ந்து, பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தினர் போலீசார் பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால், சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதியிலேயே தடைபட்டது. இந்த நிலையில், பத்திரகாளியம்மன் கோவில் தரப்பினை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு சொந்தமான மீதமுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் இந்தாண்டு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி உத்தரவு பெற்றனர். அதில் நீதிமன்றம் வழங்கி உத்தரவில் பத்திரகாளியம்மன் கோவில் தரப்பினர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர், விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி தலைமையில், ஏராளமான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையிலும், 400-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கோவிலுக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி ஜேசிபி, ட்ராக்டர்கள் மற்றும் அதிகளவிலான பணியாட்கள் மூலம் ஒரே நாளில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. இது குறித்து நீண்ட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று  பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாகி சுயம்பு  மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறியபோது, 40 ஆண்டுகளாக இருந்து வந்த நில உரிமை பிரச்சனை தற்போது நல்ல தீர்வாக முடிவுக்கு வந்துள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை சிறப்பாக முடித்துள்ளதாகவும், தாங்கள் இன்று தீபாவளி பண்டிகை போல உணர்கிறோம் என்று மகிழ்ச்சி பொங்க கூறி, இதற்கு ஒத்துழைப்பு அளித்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.