தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்துச்சாமி(48) முத்துக்குளிக்கும் தொழில் வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரையில் இருந்து முத்துச்சாமி உட்பட 7 முத்து குளிக்கும் தொழிலாளிகள் முத்துக்குளிப்பதற்காக படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் இருந்தபடியே உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த முத்துச்சாமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக படகில் இருந்த நபர்கள் வேம்பார் கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து கரைக்கு வந்துள்ளனர். பின்னர் கரையில் முத்துச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து, வேம்பார் கடல் காவல் நிலைய போலீசார் முத்துச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.