தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் ராசா பட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்று கரையோரம் உள்ள அடர்ந்த காட்டில் வேலி முள்ளில் உடல்நிலை சரியில்லாமல் முள்ளில் சிக்கி 3வயது மதிக்க  ஆண் மயில் ஒன்று மயங்கிய நிலையில்  உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளது. அப்பகுதியில் சென்றவர்கள் இதனை வேடிக்கை பார்த்தனர் தவிர மயிலை காப்பாற்றவோ , உதவி செய்யவும் முன் வரவில்லை. அப்போது அந்த வழியாக துக்க வீட்டிற்கு சென்ற கண்ணன் என்ற கூலி தொழிலாளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை பார்த்து வேதனை அடைந்து மட்டுமின்றி அதனை காப்பாற்றுவதற்கான முயற்சி மேற்கொண்டார். நீண்ட அடர்ந்து புதர் போன்று  இருந்த அந்த முள்வேலிக்குள் மிகுந்த சிரமத்துடன் உள்ளே சென்றார். அவரது உடலில் முள் ரத்தம் வழிந்த போதும் அதனை பொறுப்பெடுத்தாமல் உள்ளே சென்று மயிலை மீட்டார். மேலும் மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இது குறித்து விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து தொழிலாளி கண்ணனிடமிருந்து மயிலை பெற்றுக் கொண்டு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். எல்லோரும் வேடிக்கை பார்த்தபோது எதையும் பொருட்படுத்தாமல் உடலை முள் பதம் பார்த்தபோதும், அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மயிலை காப்பாற்றிய கூலி தொழிலாளி கண்ணனின் மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர். நாகலாபுரம் கால்நடை மருத்துவர் மனையில் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.