விளாத்திகுளம் அருகே 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி - அங்காள பரமேஸ்வரி தம்பதியினரின் மகள் உமா மகேஸ்வரி (16). இச்சிறுமி பிறப்பில் இருந்தே மனவளர்ச்சி குன்றிய நிலையில் பள்ளி எதுவும் செல்லாமல் பெற்றோரது அரவணைப்பில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் உமா மகேஸ்வரியின் தாய் அங்காள பரமேஸ்வரி துணி துவைப்பதற்காக அக்கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் சென்ற சிறுமி உமாமகேஸ்வரி அவரது தாயின் அருகே அமர்ந்திருந்த நிலையில் திடீரென மாயமாகி உள்ளார். சிறுமியின் தாய் தனது மகள் உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்று இருப்பதாக நினைத்துக்கொண்டு துணிகளை துவைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது உமா மகேஸ்வரி வீட்டிலும் இல்லாததைக் கண்டு அச்சமடைந்த தாய் அங்காள பரமேஸ்வரி தனது மகளை தேட தொடங்கியுள்ளார். அப்போது கிராம மக்கள் சிறுமி உமா மகேஸ்வரி கண்மாயில் இறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். பின்னர் அங்கு சென்று பார்த்த சிறுமியின் தாய் அங்காள பரமேஸ்வரி தனது மகள் உயிரிழந்து‌ கிடப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுமியின் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மன வளர்ச்சிக்கு குன்றிய 16 வயது சிறுமி உமா மகேஸ்வரி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்போது மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.