விளாத்திகுளம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 75 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன!  நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் "விநாயகர் சதுர்த்தியை" முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் ஏராளமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வந்த நிலையில், தற்போது விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், காவல்துறையின் அனுமதியுடன் ஏராளமான விநாயகர் சிலைகள் தெருக்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டு கடந்த 7 தினங்களாக பூஜிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று விளாத்திகுளத்திலிருந்து அருகே உள்ள வேம்பார் கடலில் கரைப்பதற்காக  விளாத்திகுளம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 75 விநாயகர் சிலைகள் ஏராளமான வாகனங்களில்  போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் கடற்கரையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டப்பின் உற்சாகமாக மேளதாளத்துடன் அனைத்து விநாயகர் சிலைகளையும் பொதுமக்கள் பத்திரமாக கடலிலுக்கு எடுத்துச்சென்று அவற்றை கடலில் கரைத்து புனித நீராடி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இங்கு அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருப்பதால், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததோடு மட்டுமின்றி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.