எட்டையபுரத்தில், 61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா கொண்டாட்டம்! மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில், பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் 2 நாட்கள் பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று இன்றும், நாளையும் என  "61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா" சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழாவின் முதல் நாளான இன்று (23.09.2023) மாலை மகாகவி பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணி மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் "பாரதியின் தாகமும் தவிப்பும்" என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில், தேவராட்டம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தினர், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.