அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் - 54 ஜோடி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள A.குமாரபுரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாள் மற்றும் காளியம்மன் கோவில் பொங்கலை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு மற்றும் பூஞசிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 54 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி முதலிடத்தினை பெற்றது. இதனைத்தொடர்ந்து 4 கிலோமீட்டர் தொலைவில் 37 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியிலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி முதல் பரிசினை வென்றது. கிராமத்தின் கோவில் பொங்கல் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.