விளாத்திகுளத்தில், "இயற்கை வேளாண்மை போராளி நம்மாழ்வாரின் 11-வது ஆண்டு நினைவு தினம்" அனுசரிப்பு : யூனியன் சேர்மன் மலர்கள் தூவி மரியாதை!
தமிழகத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி செய்து வந்த விவசாயத்திற்கு மாற்றாக பெரும் புரட்சியாக இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய "இயற்கை வேளாண்மை போராளி" டாக்டர். கோ. நம்மாழ்வாரின் 11-வது நினைவு தினம் பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக அனுசரிக்கப்பட்டு அவரின் பெருமைகள் பறைசாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் திருவுருவப்படத்திற்கு ஏராளமான இயற்கை விவசாயிகள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் நம்மாழ்வாரின் திருவுருவப்படத்துக்கு மலர்கள் தூவி செலுத்தினார். பின்னர் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனுக்கு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசாக ஏர் கலப்பை வழங்கப்பட்டது. இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் காளிமுத்துராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கணேசன், விருதுநகர் மாவட்ட தலைவர் ராமர், சங்கத்தின் நிர்வாகிகள் முத்துராஜ், மாரிச்செல்வம், ரவிசங்கர், தங்க மாரியப்பன், அழகேந்திரன், ஆகாஷ், தங்கமுத்து பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.