விளாத்திகுளம்: நாகலாபுரத்தில், "உன்னால் முடியும் ஜெயித்து காட்டு" என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி : ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் தனியார் திருமண மண்டபத்தில், நாகலாபுரம் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சி குழு சார்பில் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நடைபெறவிருக்கும் அரசு பொது தேர்வில் அச்சமின்றி தேர்வினை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இன்று திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு "உன்னால் முடியும் ஜெயித்து காட்டு" என்ற ஒரு நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.


இதில் நாகலாபுரம், காடல்குடி, கவுண்டன்பட்டி, செங்கோட்டை, கோடாங்கிபட்டி, கரிசல்குளம், என்.வேடப்பட்டி உட்பட பல்வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த வட்டாரக் கல்வி மற்றும் வளர்ச்சி குழுத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் கிருஷ்ண பரமாத்மா உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது நாகலாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


அதேபோன்று ஒட்டுமொத்தமாக 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளை கௌரவிக்கும் விதமாக நாகலாபுரம் வட்டார கல்வி மற்றும் வளர்ச்சிக்குழு சார்பில் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளர் தெய்வராஜன் மற்றும் இணைச் செயலாளர் சேகர் சிறப்பாக செய்திருந்தனர்.