விளாத்திகுளம் அருகே சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்களை வேட்டையாடும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை : உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்...


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர்கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், வேர்கடலை, கம்புசோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களை கடித்து பெரிதும் நாசம் செய்து வருதாகவும், இதுகுறித்து வேளாண்மைதுறை மற்றும் வனத்துறையினரிடம் புகார் பலமுறை அளித்தும் தற்போது வரை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது விவசாய  நிலங்களை பாதுகாக்க இரவு பகலாக விவசாய நிலங்களிலேயே காவலுக்கு நின்று வெடி வெடித்தும், நிலத்தை சுற்றி பாதுகாப்பு அமைத்தும், விளைநிலங்களை பாதுகாத்து வருகிறோம், அப்படி இருந்தும்... தங்களால் காட்டு பன்றிகளிடமிருந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பன்றிகள் மற்றும் மான்களின் தொல்லையினால் இப்பகுதி விவசாயிகள் பெரும்  நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றனர். இந்தாண்டு போதுமான மழையில்லை என்பது ஒரு புறம் இருக்க... இதுபோன்று காட்டு விலங்குகளிடமிருந்து தங்களது விவசாய நிலங்களை பாதுகாத்துக் கொள்ள  தாங்கள் இரவு பகலாக போராடி வருகிறோம் என்றும், வங்கிகளில் விவசாயத்திற்காக அடகு வைத்த நகைகளை கூட மீட்க முடியாத சுழ்நிலையில் உள்ளோம் எனவே அரசு பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனடியாக ஆய்வு செய்து, பயிர்களை பறிகொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு  வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், கடந்த 4 ஆண்டுகளாக  காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களினால் விவசாயிகள் பெரும்  சந்தித்து வருகின்றோம்... என்று தங்களது இன்னல்களை தெரிவித்ததோடு மட்டுமின்றி, "ஆட்சிகள்தான் மாறி உள்ளது... ஆனால் காட்சிகள் மாறவில்லை" என்று கூறி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் சொந்தத் தொகுதியில் நாங்கள் இருந்தும்  இதுவரை விவசாயிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் உதவி செய்யவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.