விளாத்திகுளம் அருகே விவசாய பணிக்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி : தாய் கண் முன்னே மகன் உயிழந்த சோகம்: விபத்திற்கு பள்ளி வேன்தான் காரணமா? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம்- கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் சந்தனக்குமார் சொந்தமாக டிராக்டர் விவசாயப்பணி செய்து வந்துள்ளார். வழக்கம் போல இன்று காலை கோடாங்கிபட்டியிலிருந்து சந்தனக்குமார் அவரது தாயார் இராஜேஸ்வரி, மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கோமதியம்மாள், சரஸ்வதி ஆகிய 4 பேரும் விவசாய பணிக்காக டிராக்டரில் அ.வேலாயுதபுரம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை உரிமையாளர் சந்தனக்குமார் ஓட்டி வந்துள்ளார், அப்போது அவ்வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த G.K.விநாயகா வித்யாலயா பள்ளி வாகனம் ஒன்று டிராக்டரை முந்திச்செல்ல முயன்றதில் பள்ளி வேன் டிராக்டர் மீது உரசியதில்
நிலை தடுமாறிய டிராக்டர் சாலையோர நீர்வரத்து ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிச் வந்த சந்தனக்குமார் மற்றும் விவசாய பணிக்காக சென்ற கோமதியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டிராக்டரில் வந்த சந்தனகுமாரின் தாய் இராஜேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த சந்தனக்குமார் மற்றும் கோமதிம்மாள் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இந்த விபத்திற்கு பள்ளி வாகனம் தான் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிராக்டரை ஓட்டி வந்த சந்தனகுமார் தனது தாயார் இராஜேஸ்வரியின் கண்முன்னே பரிதாபமாக உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...