தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரனுக்கு விளாத்திகுளம் பகுதிகளில் லாரியில் ரகசிய அறை வைத்து புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர் காமாட்சிபால்ராஜ் அடங்கிய தனிப்படை அமைத்து விளாத்திகுளம் காவல் உட்கோட்ட பகுதியில் சோதனை செய்து வந்தனர்.இதனை அடுத்து விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம்- வாதலக்கரை செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமானமுறையில் ஒரு லாரி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று லாரியை சோதனை செய்தபோது,லாரியில் சுமார் 5அடி உயரத்திற்கு 4 அடி அகலத்திற்கு யாரும் சந்தேகப்படாத நிலையில் அறை அமைத்து பல நாட்களாக அந்த ரகசிய அறையின் மூலம் புகையிலைப் பொருட்களை  விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு விற்பனைகாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.இதனை அடுத்து தனிப்படை போலீசார் லாரியில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 50,000 மதிப்புள்ள 230 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரகசிய அறை உள்ள லாரியை பறிமுதல் செய்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (47) என்பவரை கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் ஏற்கனவே புகையிலை கடத்தல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர் என்பதும், ஏற்கனவே ஜெயராஜ் மீது  விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் என 10 வழக்குகளும் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,புதூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கம், தூத்துக்குடி அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவகாசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், என மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.