தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி: செந்தில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரபா. இவர் கடந்த 21-ந்தேதி கோவில்பட்டி ராஜ் மஹால் பகுதியில் தனது மகள் ஹரிணியுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து லட்சுமி பிரபா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ராஜூவ் நகர் 6-வது தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.