தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி செல்வம் என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு தெரிந்த லட்சுமணன் என்ற சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல், பல வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர வலியுறுத்தி கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதற்கிடையே விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை போலீசார் பிடித்து பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நேற்று(23/04/2024) நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து மாரிச்செல்வன் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் கொண்டு வீசியுள்ளனர். இதில் மாரிச்செல்வன் வீட்டின் முன் பகுதியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டுக்காரர் முன்பு நிறுத்தி வைத்திருந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கிவிட்டு ஓடியுள்ளனர். அதுமட்டுமின்றி, வழக்கறிஞர் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான தோட்டம் ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் காரணமாக கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.