கோவில்பட்டி இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது - 43 பவுன் நகை மீட்பு!



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா்  செய்யது சுலைமான். இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி மர்ம நபர்கள் இவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 45 பவுன் தங்க நகை மற்றும் 26 ரூபாய் லட்சம் ரொக்கப்பணம் ஆகிவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ‌ வடக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை போலீசார் தோட்டிலோவன்பட்டி விலக்கில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செந்தில்வேல் முருகன்,சண்முகம் மற்றும் காவலர்கள் கழுகாசலமூர்த்தி,ரமேஷ், காளிராஜ்,கார்த்திக், சென்றாய பெருமாள் ஆகியோர் அடங்கிய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூற இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்களது பாணியில் விசாரித்தனர். 

விசாரணையில் இருவரும் சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், காஞ்சிபுரம் பள்ளிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி என்ற அபூபக்கர் என்பதும் இவர்களுக்கும், இறைச்சிக்கடை உரிமையாளர் செய்யது சுலைமான் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளடிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் படி இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேஷ் ராஜ் என்ற ஜாக்கு கணேஷ், சக்தி கணேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 43 1/4 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.