கோவில்பட்டியில் அடிக்கடி அறிவுரை வழங்கியதால் காவலாளியை அரிவாளால் தாக்கிய பள்ளி சிறுவன்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜன் மகன் பாலகுமார் (28). கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஏவி அரசு உதவி பெறும் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இவர் நேற்று பள்ளி அருகே உள்ள கடையில் உட்கார்ந்து இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரை அதே பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் அரிவாளால் தாக்கியதில் அவருக்கு கழுத்தருகே வெட்டு காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து 14 வயது சிறுவனை பிடித்து இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தினர். சிறுவனுக்கு அறிவுரை மற்றும் கவுன்சிலிங் வழங்கி விடுவித்தனர்.
மாணவன் சுற்றி திரிவதை கண்டித்து, படிக்கும் படி அடிக்கடி அறிவுரை வழங்கியதால் ஆத்திரத்தில் வெட்டியதாக சிறுவன் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.