ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் 01-12-2023  வெள்ளிக்கிழமை அதிகாலை சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளி வாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தனகூடு துவா செய்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு இரவு முழுதும் கிராம வீதிகளில் வலம் வந்து அதிகாலை தர்ஹாவுக்கு வந்து அடைந்தது,இந்த சந்தனக்கூடு முன்பு கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் (பெரும்பாலானோர் சென்னையில் வசித்து வந்தாலும்)சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடல் பாட்டுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.களிகம்பு  நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி, ஒருவருக்கொருவர் சிக்காத வகையில், கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும் 12 பேர்( 3 இடங்களில்) களிகம்பு நடனம் ஆடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட்டனர். என்னதான் வெளி ஊர்களில் அரசு வேலை பார்த்தாலும், வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், பல நிறுவனங்களுக்கு தொழில் அதிபராக இருந்தாலும், சொந்த ஊரில் திருவிழாவை உற்சாகமாக கண்டுகளிப்பது போல் வேறு எந்த சந்தோஷமும் ஈடு இணை ஆகாது.....!