தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார்(7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அஸ்வின் குமார் காய்ச்சல் காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று வேம்பார் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது  வீட்டில் தனியாக இருந்த அஸ்வின் குமார் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின் உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமின்றி காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.